Monday, December 17, 2012

கீத கோவிந்தம் (ஜெயதேவர்)


 சகியே; இங்கு கொண்டுவா அவனை
அந்த சபலக்காரனை,
சந்தோஷத்தை பகிர்ந்தளிக்கும் தாராளக்காரனை
காமனின் சிலிர்க்க வைக்கும் கற்பனைகளை

உயிர்ப்பிக்கும் வித்தையறிந்தவனை.
இங்கு கொண்டுவா;
கொடிகளின் ரகசிய மணவறையில்
இருள் கவிந்த வேளையில்
இங்குமங்கும் பார்த்தபடி
அச்சத்தைத் தொலைத்தபடி
நானிருந்தும் சத்தமிட்டு சிரிக்கும் அவன்
நாணம் தரும் வித்தைகளில் முன்னேற
எத்தனை ஆசையெனக்கு.

என் கண்ணனை துய்க்கவிடு
மலர்கள் நிறைந்த
என் பள்ளியறையில் நான் கிடக்க
மெதுவே என்மீது சாயும் அவன்
படபடக்கும் என் இதயத் துடிப்பையும் செவியுறுவான்
பரஸ்பர தழுவலில்
திருத்தப் பிணைப்பாக நம்மை ஒன்றிணைப்பான்
கள்ளூறும் இதழைப் பருக நான் எத்தனிக்க
அவனோ என்னிதழ்களில் தேனெடுப்பான்

களைப்பில் என் இமைகள் கவியும் வேளை
கன்னங்களில் கூசும் முத்தங்களிட்டு
என்னை எழுப்புவான் அவன்.
ஒளிவு மறைவற்ற காதலின் வியர்வையில்
என் உடல் நனைந்திருக்கையில்
என் மனதின் சுகத்தைவிட
மென்மையாய் அவனிருப்பான்.
கூடல் பொழுதின் மென்மகன் அவனை
சுகிக்கவிடு, சகியே!

என் காம இச்சையின்
உயரும் துடிப்பை அவனறிவான்.
கட்டுப்படுத்தவியலா என் ஆனந்தச் சத்தம்
குயிலின் குரலைப் போன்றிருந்து பின்
ஒரு புறாவின் குரலாய்
அடங்கித் தேய்கிறது.
போதுமென்று அவன் எச்சரித்தபோதும்
எனக்குத் தெரியும்
காதல் பாடத்தின் கற்பித்தல் அனைத்தையும்
தாண்டிவிடுவேன் நான்.
அவன் நகக் குறிகளை நான்
கர்வத்துடன் அணிந்துகொள்வேன்
காதலின் சின்னமாக.


”அனுபவங்கள் அறிதல்கள் நித்ய சைதன்ய யதி” புத்தகத்திலிருந்து – மொழியாக்கம் சூத்ரதாரி

Wednesday, November 21, 2012

கண்டடைதல்

கண்டடைதல்


இறைவனே பிரிந்து வளர்ந்து
நேருக்கு நேர் கண்டைடயும் கணம்.

தாயாகவும் சேயாகவும்
நிறைவுறும் தருணம்.

ஒரு சீன ”யின்யான்”
வட்டத்தின் முழுமை

ஏக்கமும் அன்பும்
தங்களை இட்டு நிரம்பும் நொடி

ஆதி உணர்வை ஆடியில்
கண்டு திகைத்து நிற்கிறேன்!!

Friday, November 16, 2012

நிர்வாணம்

 நிர்வாணம்

Blown Out - Nirvana
ஓர் நாள் முடிவுடன் எழுந்தேன்
போதும் இந்த விளையாட்டு என துணிந்தேன்

சான்றோன் என சொன்னவரை அணுகி
”சலித்துவிட்டேன், அர்த்தமற்ற
நகல் எடுக்கும் வாழ்வில் பொருளற்றுவிட்டேன்
இருளில் தடம் தெரியாமல் நிற்கிறேன்.
வாழ்வின் பொருள்தான் என்ன?”
என வினவினேன்.

சற்றே கூர்ந்து பார்த்த அவர் மிரண்டு
அங்கே ஒரு அருகர் இருக்கிறார் அவரிடம் செல்
உனக்கு நிச்சயம் வெளிச்சம் அளிப்பார் என்றார்.

அருகரை தேடி அடைந்தேன்
புத்தரின் அழகில் மென்மையில் நிதானத்தில்
ஒரு கணம் ஸ்தம்பித்தேன்.
அவரிடம் மெதுவாக தீவிரமாக
மீண்டும் அதையே கேட்டேன்
”சான்றோன் வெளிச்சம் அளிப்பீர்கள் என்றான்”
என சொன்னேன்.

மெதுவாக நடந்து கொண்டு
தாமரை மொட்டை விரலில் சுழற்றிக் கொண்டு
மென்மையாக புன்னகைத்து
என்மேல் பார்வையை கவிழ்த்து
“உனக்கு நீயே ஒளியாய் இரு” என்றார்.

அக்கணமே அமர்ந்தேன்
ஆண்டுகள் பல சென்றன.
பேச்சில்லை உரையில்லை
மன இருள் விலகி வெளிச்சம் பரவியது
தெளிவடைந்து ஓர் நாள் மீண்டும்
மெளவுணம் கலைத்தேன்

நன்றியுடன் வணங்கி புத்தரை வினவினேன்
அடுத்து என்ன என்று?
மீண்டும் அழகாக புன்னகைத்து
”ஊதி அணைத்து விடு” என்றார்.
நானும் புன்னகைத்துக் கொண்டேன்.
விடுதலை அடைந்தேன்.

Wednesday, October 24, 2012

சிலப்பதிகாரம்

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத
தோற்றம் மாய்வான்.

பொறை மலி பூம் புன்னைப் பூ உதிர்ந்து நுண் தாது
போர்க்கும் கானல்.

நிறை மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே
தீர்க்கும் போலும்.
-------------------------------------------------------------------------------
காவிரியை நோக்கி பாடும் கானல் வரி பாடல் -- சிலப்பதிகாரம்

கடற்கரையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள் அம்மணலிலே தோய்ந்து உழுதலால் வருக்கள் (சிறு குழிகள்) ஏற்படும். அவ்வடுக்களை அக்கடற்கரையிலே உள்ள புன்னை மரங்கள் தமது செழுமையான பூக்களில் இருந்து உதிர்ந்த, நுண்ணிய பூந்தாதுக்களால் மூடி மறைக்கும். அத்தகைய கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியின் முழுமதி போன்ற ஒளி பொருந்திய முகத்திலே கயல்போன்ற கண்கள் செய்த காம நோயாகிய வடுவினை வேறு மருந்து எதனாலும் போக்க முடியாது. தேமல் படர்ந்த அவளது மென்மையான முலைகள் மட்டுமே அந்நோயைப் போக்கும் சக்தியுடையன போலும். {சங்குகள் செய்த வடுக்களைப் பூந்தாதுக்கள் மூடி மறைக்கலாம். ஆனால் அவள் கண்கள் செய்த நோய் தீர அவள் முலைகள் தலைவன் மார்பிலே தோய்ந்து சூடான ஒற்றடம் பெருவதைத் தவிர வேறு மருந்து இல்லை போலும்}

Tuesday, October 23, 2012

SCIENCE + SPIRITUAL



ஆன்மீகமும் அறிவியலும்



மனிதர்களை இரு வகையினராக பிரிக்கலாம். அறிவியலாளர் மற்றும் ஆன்மிகர் என்று. அறிவியலாளர்கள் வெளியே ”நிரூபிக்கப்படுமாறு” தேடுகிறார்கள். ஆன்மீகர் உள்ளே திருப்தி அடையுமாறு தேடுகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் உணர்வு ரீதியாக புரிந்து கொள்பவர்கள். பார்வையை பகிர்ந்து கொள்பவர்கள். அடுத்த கட்டத்திற்கு சென்று கொண்டே இருப்பவர்கள். உண்மையானவர்கள். உள்ளத்தில் எப்போதும் தீரா தாகத்தைக் கொண்டவர்கள். வாழ்பவர்கள். இவர்களே மனித சிந்தனை வளர்ச்சியில் அடுத்த பரிணாமத்தை முன்வைப்பவர்கள்.

இரு நிலைகளுக்கு இடையில் எப்போதும் பெரும்பான்மையானோர் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்களையும் இரண்டாக பிரிக்கலாம். மதவாதிகள் மற்றும் நாத்திகவாதிகள். இவர்கள் எதையும் தேடுவதில்லை. இவர்கள் தற்காலிகமானவர்கள். தனக்கென்று சுயமதிப்பீடு ஏதும் இல்லாதவர்கள். ”சமூக வசதி”யே இவர்களின் இலக்கு. பொதுவாக “நுகர்வோர்” என்று உலகில் அழைக்கப் படுகின்றனர். மதவாதிகள், ஆன்மீகம் வளர்ந்து உறைந்து போன “நிலையங்களில்” (மதங்களில்) தங்கி விடுகின்றனர். ஆன்மீகத்தை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்பவர்கள். அதனால் மூடநம்பிக்கைகளையும்
, சடங்குகளையும் உற்பத்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இவர்களிலிருந்தே தொடர்ந்து ”போலி ஆன்மீகவாதிகளும்” முளைத்து அவர்களை திருப்தி செய்த வண்ணம் இருப்பவர்கள். இந்த வகையினரே மதசண்டைகளுக்கு காரணமானவர்கள்.

நாத்திகம் பேசுவோர்கள் மதவாதிகளை தாக்குவதில் நிறைவு கொள்கின்றனர். ”உலகில் அனைத்து மதங்களும் இல்லாமல் ஆனபின் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று நாத்திகவாதிகளை கேட்டால் விழிப்பார்கள். அவர்களுக்கு தகர்க்க வேண்டிய பெறும்சுவர் அவர்கள் முன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த சுவற்றுக்குப் பின்னால் என்ன என்பதற்கு அவர்கள் பார்வை செல்வதே இல்லை. இந்த இருவர்களுக்கும் தேடுதலே இருப்பதில்லை. அடுத்த நகர்வு என்பதே இல்லை. நிலைபெற்றுப் போனவர்கள். தேங்கிய குட்டைகள். நாத்திகர்களுக்கும் மதவாதிகளுக்கும் எதிலும்
அக்கறை இருப்பதில்லை. குழுவாகவே இயங்குபவர்கள் தனித்து இயங்க முடியாதவர்கள்.

Saturday, October 20, 2012

நம் எண்ணம் எப்படியோ அப்படியே நாம்.
நாம் எழுவதெல்லாம் நம் எண்ணத்தாலே.
உலகை உருவாக்குவதும் நம் எண்ணங்கள் தான்.
தூய்மை இல்லாமனதுடன்
பேசினாலும் செயல்பட்டாலும்
உன்னை துன்பங்கள் பின்தொடரும்,
வண்டி இழுக்கும் எருதை சக்கரம் தொடர்வது போல.

WE ARE WHAT WE THINK.
ALL THAT WE ARE ARISES WITH OUR THOUGHTS.
WITH OUR THOUGHTS WE MAKE THE WORLD.
SPEAK OR ACT WITH AN IMPURE MIND
AND TROUBLE WILL FOLLOW YOU
AS THE WHEEL FOLLOWS THE OX THAT DRAWS THE CART|


வலிமையற்ற மரத்தை காற்று
எளிதில் சாய்த்துவிடுகிறது.
புலன்களின் மகிழ்ச்சி தேடுதலும்
ஊனிலும் உறக்கத்திலும் நிறைவு கொள்ளலும்
உன்னைச் சாய்த்துவிடும்.

காற்றினால் மலையை புரட்டமுடியாது.
விழிப்புணர்வும் வலிமையையும்
அட்டக்கமும் கொண்டு, விதியை மதித்து
தன்னை ஆள்பவனை ஆசை தொடாது.

HOW EASILY THE WIND OVERTURNS A FRAIL TREE.
SEEK HAPPINESS IN THE SENSES,
INDULGE IN FOOD AND SLEEP,
AND YOU TOO WILL BE UPROOTED.

THE WIND CANNOT OVERTURN A MOUNTAIN.
TEMPTATION CANNOT TOUCH THE MAN
WHO IS AWAKE, STRONG AND HUMBLE,
WHO MASTERS HIMSELF AND MINDS THE LAW.

--புத்தர் (தம்மபதம்)

Thursday, October 18, 2012

தியானம்






உடலும் மனமும் வேறு வேறு அல்ல. உடல் தூலமானது என்றால் மனம் சூட்சுமமானது. இரண்டும் நாணயத்தின் இருபக்கங்களே. ஒன்றை பார்க்க முடிந்தால் மற்றதை பார்க்க முடியாது. உடல் உண்மை என்றால் மனம் மாயை. உடல் பாதித்தால் மனம் பாதிக்கும். மனம் பாதிப்பில் இருந்தால் உடலும் பாதிப்புக்குள்ளாகும். உடலை சீர்படுத்தி மையத்தை அடைவதே யோகம். மனதை சீர்படுத்தி மையத்தை அடைவது தியானம். இருமுனைகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். உடல் முனையில் ஆரம்பித்து மையத்தை நெருங்கும்போது மனமும் நெருங்கியிருப்பதை உணர முடியும். ஒரு சிறிய மரக் கம்பை இரண்டு கை சுட்டு விரல்களின் மேல் வைத்து எதாவது ஒரு முனைவிரலை நகர்த்தும்போது மறு முனைவிரலும் தானாக நகர்ந்து, எப்படி ஒரே நேரத்தில் கம்பின் மையத்தை அடைகிறதோ அப்படி.

மந்திரம் உச்சரிப்பதில்- ஜெபிப்பதில் எனக்கு பூரண நம்பிக்கை இல்லை. அது ஆரம்பத்தில் நல்ல பலனை கொடுக்கலாம். கொடுக்கும். ஆனால் நிரந்தர வழியாக இதை கொள்ள முடியாது. உடனடி நிவாரணம் போல் இதை பயன் படுத்தலாம் அவ்வளவுதான். ஒரு கட்டத்திற்கு மேல் நாம் நம்மை அறியாமலேயே இதிலேயே சிக்கிக் கொள்ள வாய்ப்பு அதிகம். நம் மனம் அப்படி.

முதலில் மனம் என்பது என்ன? நம்மில் எழும் எண்ணக் கூட்டங்கள்தான். அதற்கென்று தனியாக ஒரு இருப்பு இல்லை. இடையறாது இயங்கிக் கொண்டே இருக்கும் இயந்திரம் அது. அதை நம்மால் என்றுமே அடக்க முடியாது. செய்யும் முயற்ச்சிகள் எல்லாம் அதனை மேலும் மேலும் வலுவானதாக்கும். தூசி நிரம்பி பறந்து கொண்டிருக்கும் அறையின் நடுவில் நாம் நிற்பது போல். அந்த பறக்கும் தூசியை நாம் அடக்குவதற்கு நிறுத்துவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் எல்லாம் அதை மேலும் அதிகமாகவே பரவச் செய்யும், பார்வையை மறைக்கும். முயற்சி ஏதும் செய்யாமல் நிற்பதே அதை படியச்செய்யும் பார்வை துலங்கும்.

மந்திரம் செபிப்பதும், சிறந்த இசையை ஒன்றி கேட்பதும் தற்காலிகமாக ஒரு ஓர்மையை கொடுக்கும். குழப்பமான மனதுடையவர்களுக்கு இது சிறந்த தற்காலிக நிவாரணம் வழங்கும் வழி. மந்திரம் சொல்வது ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் மனதை குவிக்கும். மனம் இல்லாமல் ஆவதில்லை. காகிதத்தில் பரப்பில் பரவி இருக்கும் இரும்புத் துகள்கள், காகிதத்தின் அடியில் ஒரு காந்தத்தை வைத்தவுடன் எப்படி எல்லாத் துகள்களும் ஓர் இடத்தில் குவிகிறதோ அப்படி. ஒரு தற்காலிக நிறுத்தம். அதை எடுத்தவுடன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்.


மனம் இல்லாத நிலை என்று ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா என்று கேள்வி எழலாம். ஏனென்றால் நாம் கற்பனைகூட செய்து பார்க்க முடியாதது அது. அதற்கு வாய்ப்பே இல்லை என்றுகூட நாம் சொல்லத் துணிவோம். ஆனால் நாம் அனைவரும் அதை சில நொடிகளேனும் சில நேரங்களில் அனுபவித்திருக்கிறோம். சூரிய உதயத்தை பார்க்கும்போது, சிறந்த இயற்க்கை நிலக் காட்சிகளில் இருக்கும் போது சட்டென்று ஒரு பிரமிப்பு, எந்த பிடிமானமும் இல்லாமல் சிந்தனையும் இல்லாமல் ஒரு நிலை. அதை தாங்கமுடியாமல் மீண்டுவந்து “என்ன ஒரு அற்புதமான காட்சி” என்ன அழகு என்றெல்லாம் வார்த்தைகளை கொட்டி அதை நாம் நம் எண்ணங்களால் மூடி விடுவோம். மனமற்ற நிலையில் அந்த நொடிகளில் திரை விலகி சட்டென்று ஒரு ஆழம் தெரிகிறது, திறக்கிறது. உடனே நாம் வெளியில் வந்து விடுகிறோம்.
-


மனதுடன் நாம் சம்பந்தப் படுத்திக் கொள்ளாமல் விலகி இருந்து “கவனிப்பதே” சிறந்த வழி. athuஅதையே நான் தியானமாக பார்க்கிறேன். செய்கிறேன்.
வரும் எண்ணங்களுக்கும் நமக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை என்றிருப்பது. ”சாட்சி பாவத்துடன்” இருப்பது. நாம் முன்னர் செய்த இழிவான செயல்கள், பெருமைக் குரிய செயல்கள், நல்ல எண்ணம்-தீய எண்ணம், கடந்த கால வாழ்க்கை, எதிர்கால திட்டமிடல் இவை அணைத்தும் நம் எண்ணங்கள் மட்டுமே. அது நாம் அல்ல. அதனால் எந்த ஒரு குற்ற உணர்வுக்கோ, பெருமை உணர்வுக்கோ ஆட்பட தேவையில்லை அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சொல்லப் போனால் குற்ற உணர்வும் பெருமை உணர்வும் தியானத்திற்கு பெரும் தடைகள். தொடர்ந்து தியானிப்பவர்களுக்கு இந்த உணர்வுகள் மிஞ்சி இருந்தால் அவர்கள் தவறாக தியானம் செய்கிறார்கள் என்று துணிந்து கூறலாம்.

நம் மனது எண்ணத்தை பற்றிக் கொண்டே சென்று கொண்டிருக்கும். அதிலே நாம் பயணிக்கிறோம். இடயறாது இது நடந்து கொண்டிருக்கிறது. எழும் அந்தந்த எண்ணங்களுடன் நாம் சம்பந்தப் படுத்திக் கொள்வதாலேயே நாம் உணர்ச்சிக்கு ஆளாகிறோம். இந்த எண்ணத்தைப் பற்றுதல் சாட்சி பாவத்தில் தளர்கிறது, அறுபடுகிறது.

இந்த சாட்சி பாவமே, “கவனமே” சிறந்த வழி என்று சொல்வதற்கு காரணம் இது நம்முடன் தொடர்ந்து இருப்பது. ஜபமும் (மந்திரமும்) இசையும் அது நடைபெறும் பொழுது மட்டுமே மனம் குவிகிறது அதிலிருந்து எழுந்து அன்றாட வாழ்வில் நுழையும்போது மீண்டும் எண்ணங்கள் தொட்டுத் தொடர்ந்து சங்கிலிபோல் பரவ ஆரம்பிக்கிறது. சாட்சிபாவம் எளிதில் பழக்கத்தால் தொடரக்கூடியது. எங்கும் எப்போதும் எவ்வேலை செய்து கொண்டிருந்தாலும் அதனை நாம் தொடர வைக்கலாம். இதனையே ”அஜபா” (ஜபம் அற்றது) என்கின்றனர்.

நாம் அனைவரும் உறக்கத்தில் மையத்திலேதான் ஒடுங்குகிறோம். ஆனால் கவனம் இருப்பதில்லை. கவனம் இல்லாததினால் நாம் அதை உணர்வதில்லை. உறக்கத்தில் மையத்தில் ஒடுங்குவது குறைந்த நேரம் மட்டுமே. மற்ற நேரங்களில் நாம் உறக்கத்தில் இருந்தாலும் நம் மனம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். வேகமாக மிதிக்கப்பட்ட மிதிவண்டி நாம் மிதிப்பதை நிறுத்தியும் சற்று தூரம் அதாகவே சென்று நிற்பது போல் பகல் முழுவதும் இயங்கிய மனது
இரவிலும் அது இயங்குகிறது. அதுவே கனவுகளாகிறது. கனவில் லாஜிக் இருப்பதில்லை. இல்லாததற்கு காரணம் மனதை தொகுத்துப் பார்க்கும் புத்தி இல்லாததாலேயே. தொகுத்துப் பார்த்தல் அங்கு இல்லாத காரணத்தாலேயே கனவுகளில் லாஜிக் இருப்பதில்லை. கனவுகளற்ற தூக்கத்தையே நாம் “நன்றாக ஆழ்ந்து தூங்கினேன்””””“ என்று சொல்கிறோம். மனிதனுக்கு தூக்கம் மட்டும் இல்லை என்றால் பைத்தியம் பிடித்தே அலைவான். அந்த வகையில் இயற்க்கைக்கு நம் மீது பெரும் கருணைதான்.

Saturday, October 13, 2012

காரைக்கால் அம்மையின் தரிசனம்

காரைக்கால் அம்மையின் தரிசனம்


கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

---காரைக்கால் அம்மையார்

முலைகள் வற்றி சரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்த தலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும் திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம் குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.

-----------------------------------------------------------------------------

Sunday, April 22, 2012

ரமணரின் சில பதில்கள்
======================

கே: ஆத்ம தத்துவத்தைப் பற்றி புத்தி பூர்வமான நிச்சயம் அவசியமா?

ரமணர்: ஆம். சந்தேக விபரீதங்கள் தீர்ந்தாலொழிய தன்னிலையில் ஒருவன் எவ்வாறு நிற்க முடியும்? அதனாலேயே பரதத்வத்தை நன்கு கேட்டு சிந்தித்து சற்றும் சலனமற்று திட நிச்சயமுற வேண்டும். அதுவே பரோக்‌ஷ ஞானமெனப்படும். அதன்பிறகு இடைவிடா ஆன்மநாட்டத்தால், தேகான்மபாவம் அதுபற்றிய வாசனைகள் யாவும் நீங்கி, இயல்பாகவே தன்னிலை நிற்கலாம். அதுவே அபரோக்‌ஷானுபூதி எனப்படும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆன்ம நாட்டமுற்றோன் ஆத்மாவே குருவென்றுணர்வானாயின், மேற்கொண்டு எக்கேள்விக்கும் இடமில்லை. தன்னுள்ளேயே ஏகாக்ரமாய்த் தேடி தனதுண்மையை உணர் வேண்டும். அத்தகைய தீவிர நாட்டமுற்றோர் வெளியே ஒரு குருவின் சமீபத்தில் இருக்க வேண்டியதில்லை. அவ்வாறு உண்முகப் படாதவரே வெளியே நரவடிவில் இலகும் குருவின் துணையையும் நாடுவர்.

....
அமைதியை நாடி வருபவனை நோக்கி அதைச் செய், இதைச் செய்யென்று சொல்பவன் குருவாகான். விவகாரக் குழப்பத்தினின்று விடுதலையை நாடி வருபவனை மேலும் சில விவகாரங்களில் ஈடுபடுத்துபவன் எவ்வாறு வழி காட்டியாவான்? அத்தகைய உபதேசத்தால் சீடனது தளைகள் மேலும் சிக்கலாகும்

.....
குருவானவர் எதுவும் செய்வதில்லை. எந்தப் பொறுப்பும் ஏற்பதில்லை. வெறும் அஞ்ஞான சந்தேக விபரீதங்களை மாத்திரமே அகற்றியருள்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மஹாவாக்கியங்களின் வியாக்கியானங்கள் மனோமயமாம் விவாதங்களில் இழுத்துவிடுகின்றன. உன்முகப்பட விரும்புவோர் அனைத்தின் மூலமாம் நான் என்பதின் உண்மையையே அறிய முயல வேண்டும். அதனாலேயே வெளிமுக குழப்பங்கள் ஓய்ந்து உண்மையாம் அமைதி சிறந்திலகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி : சுகபோகங்களை துறக்க வேண்டுமெனில் அதை நன்றாக அனுபவித்துத் திருப்தியுற்றிருக்க வேண்டும் எனப்படுகிறதே?

ரமணர் : விஷயங்களை அனுபவித்து ஒழித்தல் என்பது தீயை மண்ணெணெய் கொண்டு அணைக்க முயற்சிப்பது போன்றதேயாம் ( சிரிப்பு) அனுபவிக்க அனுபவிக்க விஷய வாஸனை வலுத்து மேன்மேலும் நம்மை துன்புறுத்தும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கே: தூக்கத்தில் எதுவும் தெரிவதில்லை, சமாதியிலும் அவ்வாறே என்று சொல்லப்படுகிறது. அவ்வாறெனில் ஞான நிலை என்பது தான் எது?

ப : அறிவும் அறியாமையும் சற்றுமற்றதே ஞான நிலை. அது அயலேதுமற்ற நமது நிஜ சொரூபமே. இன்னதென கருதவும் கூடா அந்நிலை தானே தானாய் அனுபவத்திலேயே விளங்குவதாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேள்வி கேட்பவர் : ஆனந்தபாஷ்பம், மயிர்கூச்செறிதல், குரல் தழுதழுத்தல் முதலியவற்றிற்கும் சமாதிக்குமுள்ள சம்பந்தம் என்ன?

பகவான் ரமணர் : அவை அதிசூஷ்ம மனோ விருத்திகளே. துவைத பாவம் சிறிதேனுமின்றி அவை நிகழா. சமாதியோ ஒரே சாந்திமயம். ஆதலின் சமாதியில் அவைகளுக்கு இடமில்லை. ஆனால் சமாதியினின்று மனம் வெளிப்படுங்கால், ஆனந்த அனுபவத்தின் வெளிப்பாடுகளாய் அவை சிலகால் தோன்றக்கூடும். பக்தி மார்க்கத்தில் மனம் சமாதியில் ஆழுமுன் இந்த லக்‌ஷணங்கள் சிலகால் தோன்றக்கூடும்.

கே : ஞானமார்க்கத்தில் அவைகளுக்கிடமில்லையா?

ப : உண்டென்றோ இல்லை யென்றோ முடிவாய்க் கூறுவதற்கில்லை. அவரவர்களின் பூர்வ சாதனைகளையும் அமைப்பையும் பற்றி அவை நிகழலாம். நிகழாது ஒரே அமைதியாகவும் இருக்கலாம். மாணிக்கவாசகர் இடைவிடா உருக்கத்தையும் ஆனந்த லஹரியையும் பற்றி பாடுகிறார். அடக்க முடியாக் கண்ணீர் பெருக்கின் அனுபவம் எனக்கும் உண்டு.

.....................

கே : துக்கமின்மையே சுகமா? அல்லது சுகமென்பது தனித்ததோர் அனுபவமா?

ப : துக்கமின்மை மட்டுமல்ல வேறெதற்கும் இடமின்றியே ஸ்மிருத்தியானதோர் அனுபவமே அது. அதனாலேயே அது ஆனந்தமென நவிலப்பெறும்.

கே: தூக்கத்தின் ஆனந்தானுபவம் தெளிவின்மையால் நனி விளங்கவில்லையென்றும், சமாதியோ மறைப்பேதுமற்ற தெளிவாதலால் அங்கே ஆனந்தானுபவம் ஸ்பஸ்டமாய் விளங்குகிறதென்றும் சொல்லலாமா?

ப : ஆம். ஆம். அப்படியேதான்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Search This Blog

Pages

Followers

About Me

My photo
Madurai, Tamilnadu, India
dpaprem@yahoo.com